முத்தரசன் கண்டனம்

தமிழ்நாட்டு மக்கள் மீது தீரா பழி சுமத்துவதா?.. பிரதமர் பொறுப்பை உணர்ந்து மோடி நாவடக்கி பேச வேண்டும்:

பிரதமர் பொறுப்பை உணர்ந்து மோடி நாவடக்கி பேச வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; அரசியலமைப்பு அதிகாரம் பெற்ற நாட்டின் பிரதமர், குடிமக்கள் அனைவரையும் சமமாக நடத்தி, மதிக்க வேண்டும். அது சமய சார்பற்ற பண்புகளை அடிப்படையாகக் கொண்ட அரசியல் அமைப்பு சட்டபூர்வ கடமைப் பொறுப்பாகும். ஆனால், பிரதமர் மோடியின் தேர்தல் பரப்புரை பேச்சுக்கள் மலிவானதாகவும் தரம் தாழ்ந்தும், குடிமக்களை பிளவுபடுத்தி மோதவிட்டு ரத்தம் குடிக்கும் “நர்த்தனம், “ கொண்டதாகவும் அமைந்துள்ளது. பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் உள்ளிட்ட பாஜக, சங்க பரிவார் ஆதரவாளர்களின் பேச்சுக்கள் மக்கள் ஒற்றுமைக்கு பேராபத்தை ஏற்படுத்தும் செயலாகியுள்ளது.

இது குறித்து காலத்தில் தலையிட்டு தடுக்க வேண்டிய தேர்தல் ஆணையம் பல் இழந்த பரிதாப நிலைக்கு சென்று விட்டது. இந்தச் சூழலில் ஒடிஷா மக்களிடம் பேசி பிரதமர் ஆன்மீக நம்பிக்கையாளர்களின் உணர்ச்சிகளை தூண்டி, தேர்தல் ஆதாயம் தேடும் முயற்சியில், நம்பிக்கையுடனும் பெரும் எதிர்பார்ப்பிலும் தேடி வரும் தொலைந்து போன பூரி ஜெகநாதர் ஆலயத்தின் கருவூலச் சாவிகள் தமிழ்நாட்டில் இருப்பதாக பேசி, தமிழ்நாடு மக்கள் மீது தீரா பழி சுமத்தும் இழிவான செயலில் ஈடுபட்டிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிப்பதுடன் பிரதமர் பொறுப்பை உணர்ந்து மோடி நாவடக்கி பேச வேண்டும் என எச்சரிக்கிறது. “ யாகாவா ராயினும் நாகாக்க “… – குறள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.