துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் 21வது வாராந்திர கொரோனா மேலாண்மை சீராய்வு கூட்டம்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில் 21வது வாராந்திர கொரோனா மேலாண்மை சீராய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை வகித்தார்.

தலைமைச் செயலர் அஸ்வனிகுமார், காவல்துறை டிஜிபி ரன்வீர்சிங் கிருஷ்ணியா மற்றும் பல்வேறு துறையின் செயலர்கள், குழந்தைகள் நல தலைமை மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி அதிகாரிகள், பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் ஆளுநர் தமிழிசை பேசியதாவது, “புதுச்சேரியில், இறப்பு விகிதம் மிகவும் குறைந்திருப்பது ஆறுதலைத் தருகிறது. அரசு மருத்துவக் கல்லூரியில் குழந்தைகளுக்கான சிகிச்சைப் பிரிவு, குழந்தைகளுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் வண்ண சுவர் ஓவியங்களுடன் தயார் செய்யப்பட்டு இருப்பது பாராட்டுக்குரியது.

அந்த முயற்சிகளுக்காக சுகாதாரத்துறையை பாராட்டுகிறேன்.

கொரோனா நிலவரம் குறித்த தீவிர கண்காணிப்புக்கு பிறகே பள்ளி மற்றும் கல்லூரிகளை படிப்படியாக திறப்பது குறித்து பரிசீலிக்கப்படும். அதற்கு முன்பாக, பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்த வேண்டும். பெற்றோர்களுக்கும் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டால் பெருமளவு நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற முடியும். அதனால் தகுதியுடைய அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசி செலுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இணை நோய் உள்ளவர்கள், முதியவர்கள், விடுபட்ட முன்களப் பணியாளர்கள், பள்ளிகளில் பணிபுரியும் ஊழியர்கள் ஆகியோருக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளித்து செயல்பட வேண்டும்.

மூன்றாவது அலையை எதிர்கொள்ள இது உதவியாக இருக்கும். மூன்றாவது அலையை எதிர்கொள்வதற்கான அடிப்படைத் தயாரிப்புகளில் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க வேண்டும். தடுப்பூசி இலக்கை அடைய கூடுதல் முயற்சி செய்ய வேண்டும். புதிய தொற்றுகள் குறித்தும் நாம் கவனமாகவும், முன்னெச்சரிக்கையோடும் செயல்பட வேண்டும்.

வாராந்திர கொரோனா மேலாண்மைக் கூட்டம் திட்டங்கள் வகுப்பதற்கும், நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்குமான ஆலோசனைகள் பெற உதவியாக இருக்கிறது” என, பேசினார்.

Leave a Reply

Your email address will not be published.