ராமநாதபுரம் மாவட்ட கடலோர கிராமங்களான ஆற்றாங்கரை, தங்கச்சிமடம், மண்டபம், பெரியபட்டினம், முத்துப்பேட்டை, புதுமடம் உள்பட பல்வேறு கிராமங்களில் வெற்றிலை பயிரிடுதல் முக்கிய தொழிலாக இருந்தது. இப்பகுதிகளில் விளையும் வெற்றிலை ருசி மிகுந்ததால் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு இருந்து வந்தது. இதனால் மொத்த வியாபாரிகள் ஆர்வத்துடன் இங்கு வந்து வெற்றிலை வாங்கி சென்றனர்.
வெற்றிலை விவசாயிகளுக்கு அரசு எவ்வித சலுகையும் அளிக்கப்படாத நிலையிலும் கூட இத்தொழிலில் ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக இயற்கை இடர்பாடுகளினால் வெற்றிலை விவசாயிகள் பாதிக்கப்பட்டு வந்தும், அரசு சார்பில் நிவாரணம் கிடைக்கவில்லை. இதனால் பொருளாதார நெருக்கடியில் சிக்கி ஏராளமானோர் மாற்று தொழிலுக்கு சென்றனர். இதனால் வெற்றிலை கொடி கால்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது.
