நாளை அவசர செயற்குழு கூட்டம்

குவியும் பலாத்கார புகார்கள்; நெருக்கடியில் மலையாள நடிகர்கள் சங்கம்:

நடிகர்கள் மீது அடுத்தடுத்து பாலியல் பலாத்கார புகார்கள் குவிவதால் மலையாள நடிகர்கள் சங்கம் கடும் நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இதையடுத்து நாளை அவசர செயற்குழு கூட்டத்தை கூட்ட நடிகர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. மலையாள சினிமாவில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் பாலியல் அத்துமீறல்களுக்கு ஆளாவதாக சமீபத்தில் வெளியான நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த அறிக்கை வெளியான பிறகு பல நடிகைகள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் கொடுமைகள் குறித்து வெளிப்படையாக கூறத் தொடங்கி உள்ளனர்.

மேற்குவங்க நடிகையான லேகா மித்ரா, மம்மூட்டி நடித்த பாலேரி மாணிக்கம் என்ற படத்தில் நடிக்க வந்தபோது அதன் டைரக்டரும், கேரள சினிமா அகாடமி தலைவருமான ரஞ்சித் தன்னிடம் அத்துமீறியதாக கூறினார். இதேபோல ரேவதி சம்பத் என்ற நடிகை, நடிகரும் மலையாள நடிகர்கள் சங்க பொதுச் செயலாளருமான சித்திக் தன்னை அறையில் பூட்டி வைத்து பலாத்காரம் செய்ததாக கூறினார். மேலும் தமிழ் நடிகர் ரியாஸ் கானும் தன்னிடம் மோசமாக நடந்து கொண்டதாக குற்றம்சாட்டினார். பிரபல நடிகரும், சிபிஎம் எம்எல்ஏவுமான முகேஷ் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக டெஸ்சா என்ற நடிகையும், நடிகர் சுதீஷ் தன்னிடம் மோசமாக நடந்து கொண்டதாக ஜூபிதா என்ற நடிகையும் குற்றம் சாட்டினர்.

Leave a Reply

Your email address will not be published.