5வது நாளான நேற்று இந்திய வீரர்கள்
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான 33வது ஒலிம்பிக் பாரிசில் நடந்து வருகிறது. இதில் 5வது நாளான நேற்று இந்திய வீரர்கள், பேட்மிண்டன், குத்துச்சண்டை, டேபிள் டென்னிஸ், வில்வித்தை உள்ளிட்ட போட்டிகளில் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றனர். துப்பாக்கி சுடுதலில் ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் தகுதி சுற்றில் 7வது இடம் பிடித்த ஸ்வப்னில் குசலே இறுதி சுற்றுக்குள் நுழைந்தார். இன்று மதியம் 1 மணிக்கு இறுதி சுற்றில் ஸ்வப்னில் களம் இறங்குவதால் இந்தியாவுக்கு 3வது பதக்கம் பெற்று தருவாரா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. மகளிர் குத்துச்சண்டையில் 75 கிலோ எடை பிரிவில் லவ்லினா போர்கோஹைன், நார்வேயின் சுனி
வாவை 5-0 என வென்று கால்இறுதிக்குள் நுழைந்தார். வரும் 4ம் தேதி சீனாவின் லிக்வின் உடனான காலிறுதி போட்டியில் லவ்லினா விளையாட உள்ளார். பேட்மிண்டனில் ஆடவர் இரட்டையரில் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி கால்இறுதி சுற்றுக்குத் தகுதிபெற்றது.
கடந்த முறை வெண்கல பதக்கம் வென்ற மலேசியாவின் ஆரோன் சியா -சோ வூய் யிக்குடன் கால்இறுதியில் இன்று மாலை 4.30 மணிக்கு மோதுகின்றனர். மகளிர் ஒற்றையர் பிரிவில் ரவுன்ட் 16 சுற்றில் பிவி சிந்து(13வது ரேங்க்) இன்று இரவு 10 மணிக்கு 8வது இடத்தில் உள்ள சீனாவின் பிங்ஜியாவ்வுடன் மோதுகிறார். ஆடவர் ஒற்றையர் ரவுன்ட் 16 சுற்றில் இந்தியாவின் லக்ஷயாசென்-எச்.எஸ்.பிரனாய் மோதுகின்றனர். இந்த போட்டி இன்று மாலை 5.30 மணிக்கு நடக்கிறது. 2 இந்திய வீரர்கள் நேருக்குநேர் மோதுவது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தாலும், கால்இறுதிக்கு ஒரு இந்தியர் நுழைவது நல்ல செய்தி. ஆடவர் ஹாக்கியில் பி பிரிவில் இந்தியா மதியம் 1.30 மணிக்கு பலம் வாய்ந்த பெல்ஜியத்துடன் மோதுகிறது. குத்துச்சண்டையில் 71 கிலோ எடை பிரிவில் நேற்றிரவு இந்தியாவின் நிஷாந்த்தேவ், ஈக்வடாரின் ஜோஸ் கேப்ரியல் ரோட்ரிக்ஸ் டெனோரியோவுடன் மோதினார்.