குவைத்தில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக் நடவடிக்கை எடுக்க வேண்டும்: வெளியுறவுத் துறை செயலாளருக்கு தலைமைச் செயலாளர் கடிதம்
குவைத்தில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி மத்திய வெளியுறவுத் துறை செயலாளருக்கு தமிழக தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில்; இன்றைய சில நாளிதழ்களில் குவைத்தில் கைதான இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்களை மீட்க தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி செய்தி வெளியாகியுள்ளது. கடந்த 5.12.2023 அன்று குவைத் கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்ட நான்கு தமிழ்நாட்டு மீனவர்களை விடுவித்திட உரிய தூதரக வழிமுறைகளைப் பின்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு 9.2.2024 அன்று கடிதம் எழுதியிருந்தார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் அண்டை நாடுகளைச் சேர்ந்த கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டு மீனவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடவும், அவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாத்திடவும் உரிய தூதரக வழிமுறைகளைப் பின்பற்றி விரைவான, தீர்க்கமான நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். குவைத் கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலை செய்திட விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு ஒன்றிய அரசை, தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்த போதிலும், இதுவரை விடுதலை செய்யப்படாமல் இருப்பதால், அவர்களை விடுதலை செய்திட உரிய தூதரக நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
