ஐகோர்ட் போட்ட உத்தரவு.
ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பதா?:
தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி, கோயில் திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்ததை ஏற்க முடியாது. சட்டத்திற்கு உட்பட்டு கோயில் திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க வேண்டும்’ என போலீசாருக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், மேல் மலையனூர் தாலுகா, பழைய மரக்காணம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழாவை முன்னிட்டு, மே 18ம் தேதி ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி போலீஸ் ஸ்டேஷனில் மனு அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி போலீசார் அனுமதி தர மறுத்துவிட்டனர்.
இந்த உத்தரவை எதிர்த்து, விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த கேசவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று (மே 13) விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசுத் தரப்பு வழக்கறிஞர், லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்ததாக விளக்கம் அளித்தார்.
உத்தரவு:
இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி, கோயில் திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்ததை ஏற்க முடியாது.
சட்டத்திற்கு உட்பட்டு கோயில் திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் என போலீசாருக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்த உத்தரவை நீதிபதி ரத்து செய்து உத்தரவிட்டார்.