கே.சி.ஆர். மகள் கவிதாவை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு

தேர்தல் முடிகிற வரைக்கும் சிறைதான் போல.. ஏப்.23 வரை கே.சி.ஆர். மகள் கவிதாவை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு

சிபிஐயால் கைது செய்யப்பட்ட கே.சி.ஆர். மகள் கவிதாவுக்கு ஏப்ரல் 23-ம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. டெல்லி மதுபான கொள்கை வழக்கில் தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகரராவின் மகளும் எம்எல்சியுமான கே.கவிதாவை கடந்த 15ம் தேதி ஐதராபாத்தில் அமலாக்கத்துறை கைது செய்தது. அமலாக்கத்துறை காவல் முடிந்த பிறகு டெல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது நீதிமன்ற காவலை ஏப்ரல் 23-ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனிடையே சிறையில் உள்ள கவிதாவிடம் விசாரணை நடத்த சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ அனுமதி கேட்டிருந்தது. அதற்கு நீதிமன்றமும் அனுமதி அளித்தது. இதை தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் சிறையில் உள்ள கவிதாவிடம் கடந்த வாரம் விசாரணை நடத்தினர். கவிதா உடன் குற்றம் சாட்டப்பட்ட புச்சிபாபு என்பவரின் செல்போன் வாட்ஸ் அப் உரையாடல்கள் மற்றும் கிடைத்த ஆவணங்களில் இருந்து மதுபான கொள்கையை சாதமாக மாற்றி அமைக்க ஆம் ஆத்மிக்கு கொடுத்த ரூ.100 கோடி லஞ்சம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து ஏப்ரல் 11ம் தேதி சிறையிலேயே கவிதாவை சிபிஐ கைது செய்தது.

கவிதாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்திய பின்னர் டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கவிதா விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாகத் தெரிவித்தனர். 5 நாட்கள் காவலில் எடுக்க அனுமதி கோரினர். கவிதா தரப்பு கைதே சட்டவிரோதமானது என வாதிட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கவிதாவை மூன்று நாட்கள் காவலில் எடுக்க அனுமதி வழங்கியது. இந்நிலையில் சிபிஐ காவல் முடிந்து அவர் இன்று (திங்கள்கிழமை) மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஏப்.23 வரை நீதிமன்றக் காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published.