மார்ச் 8-ல் ஈஷாவில் கோலாகலம்
உலகின் மிகப் பிரம்மாண்டமான மஹாசிவராத்திரி விழா கோவை ஈஷா யோக மையத்தில் வரும் 8-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் இவ்விழாவிற்கான முன்னேற்பாடுகள் முழு தீவிரத்தில் நடைபெற்று வருகின்றன.
மஹாசிவராத்திரி என்பது ஆன்மீக ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாள் ஆகும். இந்த இரவில் நிகழும் கோள்களின் அமைப்பு மனித உடலில் இருக்கும் உயிர் சக்தி இயற்கையாகவே மேல்நோக்கி செல்வதற்கு உதவி புரிகிறது. இந்த நோக்கத்தில் தான் மஹாசிவராத்திரி விழா நம் பாரத கலாச்சாரத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், ஈஷாவில் 30-ம் ஆண்டு மஹாசிவராத்திரி விழா மார்ச் 8-ம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை ஆதியோகி முன்பு கொண்டாடப்பட உள்ளது. சத்குரு முன்னிலையில் நடைபெறும் இவ்விழாவில் சக்திவாய்ந்த தியானங்கள், மந்திர உச்சாடனைகள், லிங்க பைரவி தேவியின் மஹா யாத்திரை, ஆதியோகி திவ்ய தரிசனம் உட்பட பல்வேறு அம்சங்கள் இடம்பெற உள்ளன. இவ்விழாவில் நேரிலும், நேரலையிலும் பங்கேற்கும் கோடிக்கணக்கான மக்களை இரவு முழுவதும் விழிப்பாக வைத்து கொள்வதற்காக பல்வேறு இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன.