இன்றைய சிந்தனை: நமது பணி என்னவோ அதை செய்தால் போதும்!

நம்மில் யாருமே இன்னும் பல ஆண்டுகள் உயிரோடு இருக்கப் போவதில்லை. போகும்போது எதையும் எடுத்துக் கொண்டு போகப்போவதுமில்லை. ஆகவே சிக்கனமாக இருக்காதீர்கள்.

செலவு செய்ய வேண்டியவற்றிற்கு செலவு செய்யுங்கள். மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய நேரத்தில் மகிழ்ச்சியாக இருங்கள். உங்களால் முடிந்த தான தர்மங்களை யோசிக்காமல் செய்யுங்கள். எதற்கும் கவலைப்படாதீர்கள். நீங்கள் கவலைப்படுவதால், எதையும் நிறுத்த முடியுமா? வருவது வந்தே தீரும். நாம் இறந்தபின், நமது உடமைகளுக்கு என்ன ஆகுமோ என்று கவலைப்படாதீர்கள்.

அந்த நிலையில் மற்றவர்களது பாராட்டுதல்களோ, அல்லது விமர்சனங்களோ உங்களுக்கு தெரியப் போவதில்லை. நீங்கள் கஷ்டப்பட்டு சேர்த்தவை அனைத்தும், உங்கள் வாழ்க்கையோடு சேர்த்து முடிவுக்கு வந்துவிடும்.

உங்களை கேட்காமலேயே அவை முடிக்கப்பட்டுவிடும். உங்களின் குழந்தைகளைப் பற்றி கவலைப்படாதீர்கள். அவர்களின் வாழ்க்கை அவர்களுக்கு விதித்த விதிப்படிதான் அமையும். அதில் நீங்கள் எந்த மாற்றத்தையும் செய்வதற்கு வழியில்லை.

சம்பாதிக்கிறேன் என்று பணத்தை தேடி அலையாதீர்கள். பணத்தைவிட உங்கள் ஆரோக்கியம் முக்கியம். பணம் ஆரோக்கியத்தை மீட்டு தராது.

ஆயிரம் ஏக்கர் விளைநிலம் இருந்தாலும், நாளொன்றிற்கு அரைகிலோ அரிசிக்கான சாதத்திற்கு மேல் உங்களால் உண்ண முடியாது. அரண்மனையே என்றாலும், கண்ணை மூடி நிம்மதியாக தூங்க எட்டுக்கு எட்டு இடமே போதும். ஆகவே, ஓரளவு இருந்தால், இருப்பது போதுமென்று நிம்மதியாக இருங்கள்.

ஒவ்வொரு குடும்பத்திலும், ஒவ்வொரு மனிதனுக்கும் பிரச்னை இருக்கும். பிரச்னைகள் இல்லாத மனிதனை காட்டுங்கள் பார்க்கலாம்? ஆகவே, உங்களை யாருடனும் ஒப்பிட்டு பார்க்காதீர்கள். பணம், புகழ், சமூக அந்தஸ்து என மனதைப் போட்டு குழப்பிக் கொள்ளாதீர்கள்.

நீங்கள்மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் நீண்ட ஆயுளுடனும் இருந்து மற்றவர்களுக்கு உதாரணமாகத் திகழுங்கள். யாரும் மாற மாட்டார்கள். மாற்றுவதற்கு முயற்சி செய்யாதீர்கள். அதனால் உங்கள் நேரமும், ஆரோக்கியமும்தான் கெடும். மனதின் மாற்றங்கள் விரைவானது அந்த மேகங்களின் காட்சிகளை போல…

உங்களை
உதாசீனப்படுத்துபவர்களை உங்களிடம் எடுத்தெறிந்து நடப்பவர்களை அனைவர் மத்தியிலும்
யாரோ ஒருவரைப்போல கடந்துசெல்பவர்களை
உங்களின் கருத்துக்களை
அவமதிப்பவர்களை
இன்னும் ஏன்டா இவர்களுக்கு அழைப்பை ஏற்படுத்தினோம்
ஏன்டா இவர்களை பார்க்கவென வந்து தொலைத்தோம் என்று உங்கள் மனநிலையை குழம்பச்செய்பவர்களை உங்களுக்கு நோவினை தந்தாலும் கொஞ்சம் தள்ளியே இருங்கள். மேலும் நீங்கள் அவர்கள் மீது கொண்டுள்ள
நேசத்தையும்
மரியாதையையும் அவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்பது எப்போதும் உங்கள் தவறாகிவிடப்போவதுமில்லைதானே…

நீங்கள் உங்களுக்கான சூழ்நிலையை உருவாக்கி அதன் மூலம் எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள்!

நன்றி: கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

Leave a Reply

Your email address will not be published.