வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் நீட்டிப்பு
கேரள மாநிலத்தில் இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை கர்நாடகா மாநிலம் வரை நீட்டிக்கப்பட்டிருப்பது பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது
நாடு முழுவதும் 4500 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்ற இலக்குடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. தற்போது வரை 41 வந்தே பாரத் ரயில்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இதில் கேரள மாநிலத்திற்குள் பயணிக்கும் வகையில் இரண்டு ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அவை இரண்டுமே காசர்கோடு – திருவனந்தபுரம் இடையில் இயக்கப்படுகிறது. ஒரே ஒரு வித்தியாசம் என்னவெனில் வழித்தடம் தான்.
ஒரு ரயில் கோட்டயம் வழியாகவும், மற்றொரு ரயில் ஆலப்புழா வழியாகவும் இயக்கப்படுகிறது. குறிப்பாக ஆலப்புழா வழியாக செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் கண்ணூர், கோழிக்கோடு, திரூர், ஷோரனூர் ஜங்ஷன், திருச்சூர், எர்ணாகுளம் ஜங்ஷன், ஆலப்புழா, கொல்லம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது. மொத்தமுள்ள 574 கிலோமீட்டர் தூரத்தை 7 மணி 55 நிமிடங்களில் கடந்து விடுகிறது.
இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை மங்களூரு வரை நீட்டித்தால் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவிற்கு தக்ஷின கன்னடா எம்.பி நலின் குமார் கட்டீல் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இதற்கு பலனாக காசர்கோடு – திருவனந்தபுரம் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை மங்களூரு வரை நீட்டிக்க அனுமதி அளித்துள்ளது.
விரைவில் ரயில் சேவையை நீட்டிக்கும் அதிகாரப்பூர்வ ஏற்பாடுகள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு தக்ஷின கன்னடா எம்.பி நலின் குமார் கட்டீல் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். புதிய ஏற்பாட்டின் படி 20632 / 20631 என்ற எண் கொண்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மங்களூருவில் இருந்து காலை 6.15 மணிக்கு புறப்படுகிறது. பிற்பகல் 3.05 மணிக்கு திருவனந்தபுரம் வந்தடைகிறது.
இது உடுப்பி, கர்வார் என இரண்டே ரயில் நிலையங்களில் தான் நின்று செல்கிறது. அதுமட்டுமின்றி குறைவான பயணிகள் உடன் தான் பயணிக்கிறது. எனவே மும்பை வரை நீட்டித்தால் பயணிகள் வருகையை அதிகப்படுத்தும். பகல் நேரத்தில் மங்களூரு – மும்பை ரயில் சேவையில் இருக்கும் தட்டுப்பாடும் நீங்கும் எனக் கூறுகின்றனர். இதற்கு ரயில்வே நிர்வாகம் விரைவில் ஒப்புதல் வழங்க வாய்ப்பிருக்கிறது.