தமிழ்நாடு அரசு வெளியிட்ட மாநில மகளிர் கொள்கை 

கணவரை இழந்த, ஆதரவற்றோர் விகிதம் தமிழ்நாட்டில் தேசிய சராசரியைவிட அதிகமாக இருப்பதாக சமீபத்தில் தமிழ்நாடு அரசு வெளியிட்ட மாநில மகளிர் கொள்கை குறிப்பிட்டுள்ளது. அவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்போவதாகவும் அந்தக் கொள்கை கூறுகிறது. தமிழ்நாட்டில் கணவரை இழந்த பெண்களின் விகிதம் அதிகமாக இருப்பது ஏன், செய்ய வேண்டியது என்ன?

தமிழ்நாட்டிற்கான மாநில மகளிர் கொள்கை ஒன்றை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிப்ரவரி 21ஆம் தேதியன்று வெளியிட்டார். தமிழ்நாட்டில் அனைத்துப் பெண்களுக்கும் சமூக நீதியை உறுதி செய்வது, அவர்கள் உரிமைகளைப் பெற்று, திறன்களை உணர்வு, பெண்கள் சம வாய்ப்புகளுடன் அமைதியான வாழ்க்கை வாழச்செய்வதை நோக்கமாகக் கொண்டு இந்த கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்த பத்தாண்டுகளுக்கு என சில குறிக்கோள்களை இந்த கொள்கை முன்வைத்திருக்கிறது. பள்ளிக்கூடங்களில் பெண்களின் இடைநிற்றலை குறைத்தல், வளரிளம் பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், வேலை வாய்ப்பில் மகளிரின் பங்களிப்பை அதிகரித்தல், எல்லாப் பணியிடங்களிலும் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதிசெய்வது, டிஜிட்டல் பாலின இடைவெளியைக் குறைத்தல், கடன் வசதிகளை ஏற்பாடு செய்தல், மகளிரை அரசியல் களத்தில் பங்கேற்க ஊக்குவித்தல் ஆகியவையே அந்த இலக்குகளாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

இந்தக் கொள்கை எல்லா மகளிருக்கும் பொருந்தும் என்றாலும் அதன்படி, தனியாக வாழும் பெண்கள், கணவனை இழந்த ஆதரவற்றோர், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள், பாதிக்கப்படக்கூடிய தொழில்களைச் செய்பவர்கள், மாற்றுத் திறனாளிகள், வயது முதிர்ந்தோர் உள்ளிட்ட சில பிரிவினருக்கு சிறப்பு கவனம் அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் பல முக்கியப் புள்ளிவிவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி, இந்தியாவில் 5.6 கோடி கணவரை இழந்த பெண்கள் உள்ளனர் என்றும் இது மொத்த மக்கள் தொகையில் 4.6 சதவீதம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், கேரளா மற்றும் தமிழ்நாட்டில் தேசிய சராசரியைவிட அதிகமாக கணவரை இழந்த பெண்கள் உள்ளனர்.

தேசிய சராசரியை விட அதிகம்

கேரளாவில் 6.7 சதவீதமும் தமிழ்நாட்டில் 6.4 சதவீதமும் கணவரை இழந்த பெண்கள் உள்ளனர். ஆண்களைவிட பெண்கள் அதிக காலம் உயிர்வாழ்வதால் கணிசமான முதியோரைக் கொண்ட மாநிலங்களில் கணவரை இழந்த பெண்கள் எண்ணிக்கை அதிகம் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்தப் பெண்களுக்கு என சிறப்புக் கவனமும் முன்னுரிமையும் அளிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் இந்த அறிக்கை கூறுகிறது.

Leave a Reply

Your email address will not be published.