‘தமிழக மாணவர், இளைஞர்கள் ஆர்.எஸ்.எஸ்.சில் சேர ஆர்வம்’!!

சென்னை : ”ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேர தமிழக மாணவர்கள் இளைஞர்களிடம் ஆர்வம் அதிகரித்துள்ளது” என அந்த அமைப்பின் தமிழக தலைவர் குமாரசாமி தெரிவித்தார்.

அவர் அளித்த பேட்டி: ஆர்.எஸ்.எஸ்.சின் தேசிய பொதுக்குழு கூட்டம் மார்ச் 11, 12, 13ல் குஜராத் தலைநகர் ஆமதாபாத்தில் நடந்தது. அமைப்பின் நுாற்றாண்டு 2025-ல் வருவதால் அமைப்பு பணிகளை நாடு முழுதும் எடுத்துச் செல்வது குறித்து பொதுக்குழுவில் விவாதிக்கப்பட்டது.

தற்போது நாடு முழுதும் 34 ஆயிரத்து 559 ஊர்களில் ஆர்.எஸ்.எஸ். பணி நடந்து வருகிறது. 2020-ல் 55 ஆயிரத்து 652 ஆக இருந்த ‘ஷாகா’ என்ற தினமும் ஒரு மணி நேரம் நடக்கும் பயிற்சி 2021-ல் 60 ஆயிரத்து 929 ஆக அதிகரித்துள்ளது. வாரந்தோறும் நடக்கும் பயிற்சி 18 ஆயிரத்து 553-ல் இருந்து 20 ஆயிரத்து 681 ஆகவும்; மாதந்தோறும் நடக்கும் பயிற்சி 7655-ல் இருந்து 7923 ஆகவும் அதிகரித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்.சில் சேர ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிப்போரின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.தமிழகத்தில் தற்போது 2022 ‘ஷாகா’க்கள் நடந்து வருகின்றன. ஆர்.எஸ்.எஸ்.சில் சேர தமிழக மாணவர்கள் இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஷாகா பயிற்சி முகாம்களுக்கு அதிக அளவில் மாணவர்கள் இளைஞர்கள் வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.

Leave a Reply

Your email address will not be published.