இக்கட்டான நிலையில் உலகம்: பிரதமர் மோடி!!!

உத்தர பிரதேச சட்டப்பேரவைக்கு 6 கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில், வரும் 7ம் தேதி கடைசி கட்ட தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான பிரசாரத்தில் பிரதமர் மோடியும் ஈடுபட்டு வருகிறார். மிர்சாப்பூரில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் அவர் பேசுகையில், ‘‘தற்போது உலகமே ஒரு இக்கட்டான நிலையில் இருக்கிறது. ஏராளமான நாடுகள் பெருந்தொற்று, அமைதியின்மை மற்றும் நிச்சயமற்ற சூழலால் பாதிக்கப்பட்டுள்ளன.

ஆனால், இந்தியாவில் உள்ள பிரச்னைகளுக்கும் அதற்கு தீர்வு காண்பதற்கும் எந்த அளவு பாடுபட வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆபரேஷன் கங்கா திட்டத்தின் கீழ்  உக்ரைனில் சிக்கி இருந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் பத்திரமாக  மீட்கப்பட்டுள்ளனர். மேலும், தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது. கங்கை தாய் பெயரிலான எந்த விஷயமும் வெற்றி அடையும். பெருந்தொற்றின் போது, ஆபரேஷன் வந்தே பாரத் திட்டம் மூலம் வெளிநாடுகளில் சிக்கிய ஒவ்வொரு இந்தியரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஆப்கானிஸ்தானில் சிக்கியவர்கள், ஆபரேஷன் தேவி திட்டத்தின் மூலம் மீட்கப்பட்டனர். இந்த தேர்தலில் குடும்ப அரசியல் நடத்துபவர்கள், மாபியாக்கள் ஆதரவு கட்சிகளை தோற்கடிக்க வேண்டும்,’’ என்றார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.

Leave a Reply

Your email address will not be published.