சென்னையில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியது: இருவர் பலி!

சென்னை சூளைமேட்டில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி 2 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் தொடர்பாக வீட்டின் உரிமையாளர், காண்டிராக்டரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை சூளைமேடு நமச்சிவாய புரம் பகுதியை சேர்ந்தவர் பாலு (59). இவர் புதிதாக அதே பகுதியில் வீடு கட்டி வருகிறார். இந்நிலையில் சென்னை கொரட்டூர் பகுதியை சேர்ந்த ராஜ்பாபு(33) என்பவரிடம் நீண்ட மாதங்களாக மூடப்பட்டு கிடந்த தண்ணீர் தொட்டியை (சம்ப்) சுத்தம் செய்ய வேலைக்கு ஆட்கள் தேவை என்று பாலு கேட்டுள்ளார்.

இதையடுத்து ராஜ்பாபு திருவேற்காடு பகுதியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (40), திப்பு சுல்தான்(25) ஆகியோரை வேலைக்கு அனுப்பி வைத்தார். நேற்று பாலு வீட்டின் தண்ணீர் தொட்டியை இருவரும் சுத்தம் செய்ய திறந்த போது விஷவாயு தாக்கி 2 பேரும் மயங்கி விழுந்தனர்.

வீட்டின் உரிமையாளர் பாலுவின் உறவினர்கள் மயங்கி விழுந்த 2 பேரையும் மேலே தூக்கி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் முத்துகிருஷ்ணன், திப்பு சுல்தான் ஆகியோர் 2 பேரும் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 2 பேரின் உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு ஜனநாயகத்தின் மீது விழுந்த வடு: நீதிமன்றம்!

இது தொடர்பாக சூளைமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு வீட்டின் உரிமையாளர் பாலு, காண்டிராக்டர் ராஜ்பாபு ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.