மோடி பாணியில் பூபேந்திர பட்டேல்.. குஜராத் புதிய முதல்வரின் பயோடேட்டா!

குஜராத் மாநில புதிய முதல்வராக பூபேந்திர பட்டேல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவருக்கும் பிரதமர் மோடிக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது.

பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தின் முதல்வராக இருந்த விஜய் ரூபானி, யாரும் எதிர்பாராத வகையில் திடீரென நேற்று (செப்டம்பர் 11) முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார் விஜய் ரூபானி. அவரைத் தொடர்ந்து துணை முதலமைச்ச்சர் நிதின் பட்டேல், கல்வித்துறை அமைச்சர் புபேந்தரசிங் சுடாஸமா, உள்துறை அமைச்சர் பிரதீப் சிங் ஜடேஜா ஆகியோரும் ராஜினாமா செய்தனர்.

குஜராத் மாநிலத்துக்கு அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் விஜய் ரூபானியின் விலகல் அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விஜய் ரூபானியின் விலகலை தொடர்ந்து குஜராத்தின் புதிய முதல்வர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. துணை முதலமைச்சராக பதவி வகித்த நிதின் பட்டேல், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மத்திய கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் ருபாலா, மாநில பாஜக தலைவராக உள்ள சி.ஆர் பட்டேல், கோர்தன் ஜடாஃபியா உள்ளிட்டோரில் ஒருவர் முதலமைச்சராக நியமிக்கப்படலாம் என்று பேசப்பட்டது.

Also Read: தாலிபான்களால் தலைமறைவாக வாழும் 200 பெண் நீதிபதிகள்!

பூபேந்திர பட்டேல்:

அதே நேரத்தில், குஜராத்தின் புதிய முதல்வரை தேர்வு செய்வதற்கான பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் மத்திய பார்வையாளர்கள் நரேந்திர தோமர், பிரகலாத் ஜோஷி ஆகியோர் தலைமையில் இன்று நடைபெற்றது. தற்போது குஜராத்தின் முதல்வர் யார் என்ற சஸ்பென்ஸுக்கு முடிவு கிடைத்துள்ளது.

கட்லோதியா தொகுதி எம்.எல்.ஏவான பூபேந்திர பட்டேல் (வயது 55) குஜராத்தின் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் முன்னாள் முதல்வர் ஆனந்தி பென் பட்டேலுக்கு நெருக்கமானவராக அறியப்படுகிறார். ஆனந்தி பென் பட்டேல் தற்போது உ.பி ஆளுநராக இருப்பவர். அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சிவில் டிப்ளமோ பட்டயப்படிப்பு படித்து முடித்துள்ளார்.

Also Read: வோடபோன் ஐடியா நிறுவனத்தின் சிம் மோசடியால் ₹68 லட்சத்தை இழந்த வாடிக்கையாளர்!

குஜராத் மாநிலத்தில் 2 விழுக்காடு மக்கள் தொகை கொண்ட ஜெயின் சமூகத்தை சேர்ந்த விஜய் ருபானி முதலமைச்சர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து பட்டேல் சமூகத்தை சேர்ந்த ஒருவர் புதிய முதலமைச்சராக நியமிக்கப்படலாம் என்று கூறப்பட்டது. அதற்கேற்றவகையில் தற்போது பட்டேல் சமூகத்தைச் சேர்ந்த பூபேந்திர பட்டேல் முதல்வராக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் மோடி – பூபேந்திர பட்டேல் ஒற்றுமை:

புதிய முதல்வராக தேர்வாகி இருக்கும் பூபேந்திர பட்டேல், விரைவில் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார் என தெரியவந்துள்ளது. பூபேந்திர பட்டேல், அகமதாபாத் நகர நிர்வாக ஆணையத்தின் தலைவராக இருந்துள்ளார். முன்னதாக இவர் ஒரு முறை கூட அமைச்சராக இருந்தது கிடையாது. 20 ஆண்டுகளுக்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராவதற்கு முன் ஒரு முறை கூட அமைச்சர் பதவி வகித்தது கிடையாது.

Also Read: லாக் அப்பில் நிர்வாணம்: பெண் போலீசை ஈவ் டீசிங் செய்த கைதி!

மேலும் கட்லோதியா தொகுதியில் முதல் முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றிருப்பவர் பூபேந்திர பட்டேல். கட்லோதியா தொகுதி அகமதாபாத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கட்லோதியா தொகுதியில் முதல் முறையாக கடந்த 2017ம் ஆண்டு போட்டியிட்ட பூபேந்திர பட்டேல் காங்கிரஸ் வேட்பாளரான சஷிகாந்த் பட்டேலை விட ஒரு லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்

Leave a Reply

Your email address will not be published.