தமிழக சட்டசபையில் மு.கருணாநிதி படத்திறப்பு விழா! குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்னை வருகை.

சென்னை, ஆக.2 தமிழ்நாடு சட்டமன்றத்தில் கலைஞர் உருவப்படத்தை திறந்துவைப்பதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று (திங்கட்கிழமை) சென்னை வருகிறார்.

இதையொட்டி
7 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சட்டமன்ற அரங்கில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி உருவப்பட திறப்புவிழா
இன்று மாலை 5 மணியளவில் நடக்கிறது.

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முன்னிலையில் நடைபெறும் இவ்விழாவில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு கலைஞரின் உருவப்படத்தை திறந்து வைக்க உள்ளார்.

இதற்காக அவர் , டில்லியில் இருந்து விமானம் மூலம் காலை 10 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.45 மணியளவில் சென்னை வருகிறார். பின்னர் கிண்டி ஆளுநர் மாளிகையில் ஓய்வு எடுக்கிறார் . அதைத்தொடர்ந்து அவர் அங்கிருந்து மாலை 4.35 மணியளவில் புறப்பட்டு சாலை மார்க்கமாக சட்டமன்ற விழா அரங்குக்கு மாலை 5 மணிக்கு வருகை தர உள்ளார் .
குடியரசுத் தலைவர் வருகையையொட்டி சென்னையில் உயர் காவல்துறை அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பில் 7 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

குடியரசுத் தலைவர் செல்லும் வழி நெடுகிலும் காவல்துறையினர் சீரான இடைவெளியில் நின்று பாதுகாப்பு பணியை மேற்கொள்ள உள்ளனர் . விமான நிலையம் , ஆளுநர் மாளிகை , தலைமைச் செயலகம் ஆகிய இடங்களில் பலத்த காவல்துறையினர் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது . குடியரசுத் தலைவர் வருகையையொட்டி செய்யப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஒன்றிய அரசின் பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று (31.7.2021) ஆய்வு மேற்கொண்டனர் .
சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் IPS , உயர் காவல்துறை அதிகாரிகளுடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார் . விமான நிலையத்தில் இருந்து ஆளுநர் மாளிகை வரையிலும் , பின்னர் அங்கிருந்து விழா நடைபெறும் தலைமைச் செயலகம் வரையிலும் பாதுகாப்பு ஒத்திகையை காவல்துறையினர் மேற்கொள்ள உள்ளனர் . குடியரசுத் தலைவர் வருகையின்போது போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்று காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சட்டமன்றத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி உருவப்படம் திறப்பு நிகழ்ச்சி முடிந்தவுடன் அன்றைய தினம் இரவு கிண்டி ஆளுநர் மாளிகையில் தங்குகிறார் .
3 ஆம் தேதி காலை விமானம் மூலம் கோவை புறப்பட்டு அங்கிருந்து ஊட்டி செல்கிறார் .

செய்தி: S.MD RAWOOF

Leave a Reply

Your email address will not be published.