சிறு வயதில் கடத்தப்பட்ட மகன்! பல வருடங்களுக்குப் பின் கண்டுபிடிப்பு!

சீனாவில் கடந்த 1997ம் ஆண்டு ஷாங்டாங் மாகாணத்தை சேர்ந்த குவோ கேங்டாங் என்பவரின் 2 வயது மகன், வீட்டுக்கு வெளியே விளையாடி கொண்டிருந்தபோது இரு கடத்தல்காரர்களால் கடத்தப்பட்டான். போலீசார் அந்த கடத்தல்காரர்களை கைது செய்தனர். ஆனால், குவோ கேங்டாங்கின் மகனை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. தன் மகனை தானே தேடி கண்டுபிடிக்க முடிவு செய்த குவோ கேங்டாங், தன்னிடம் இருந்த பணத்தில் ஒரு பைக் வாங்கி, ஒவ்வொரு மாகாணமாக சென்று தேடினார். கையில் இருந்த மொத்த பணமும் தீர்ந்து போன நிலையில் தனது பயணத்தை தொடர்வதற்காக அவர் பிச்சையும் எடுத்துள்ளார்.
இந்த பயணத்தின் போது பலமுறை விபத்துக்குள்ளாகி அவரது எலும்புகள் முறிந்துள்ளன.
வழிப்பறி கொள்ளையர்களிடம் சிக்கி பணம் உள்ளிட்டவற்றையும் இழந்துள்ளார். ஆனாலும் அவர் தன் தேடலை நிறுத்தவில்லை. தனது மகனை தேடி 24 ஆண்டுகளாக, 20 மாகாணங்களில் கிட்டத்தட்ட 5 லட்சம் கி.மீ., பயணம் செய்துள்ளார்.

அவரின் இந்த அயராத முயற்சிக்கு, தற்போது பலன் கிடைத்துள்ளது. 2 வயதில் கடத்தப்பட்ட தனது மகனை அவர் தற்போது கண்டுபிடித்து விட்டார். இவர்கள் இணைந்த இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தின் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

NEWS: S.MD.ரவூப்

தமிழ்மலர் மின்னிதழ்

Leave a Reply

Your email address will not be published.