தமிழகத்தில் மேலும் தளர்வுகள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை
சென்னை: ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழகத்தில் சில கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் ஜூலை 19- ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனையில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழக தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, தமிழக சட்டம் ஒழுங்கு காவல்துறை டி.ஜி.பி. முனைவர் சைலேந்திர பாபு, தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன்,
பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.ஆலோசனையின் போது, கொரோனா தடுப்பூசி போடும் பணியை விரைவுப்படுத்துவது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், தமிழகத்தில் திரையரங்குகள் திறப்பது, ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள ஹார்டுவேர்ஸ் கடைகள் உள்ளிட்ட கடைகளின் நேரத்தை நீடிப்பது உள்ளிட்ட கூடுதல் தளர்வுகளை அளிப்பது ஆகியவைக் குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் கூறுகின்றன.
ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு, தமிழக அரசு இன்று அல்லது நாளை கூடுதல் தளர்வுகள் குறித்த அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது
செய்தி: S.MD.ரவூப்
