முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யலாமா? என்பது குறித்து இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.

கொரோனா பெருந்தோற்றைக் கருத்தில் கொண்டு சிபிஎஸ் இ பொதுத்தேர்வை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யலாமா? என்பது குறித்து இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனையில் அமைச்சர் அன்பில் மகேஷ், தலைமைச் செயலாளர் இறையன்பு, முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன், பள்ளிக்கல்வி செயலர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார், தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது: சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதைப் போலவே மாணவர்களின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு தான் தேர்வை ரத்து செய்வதாக கூறியுள்ளனர்.

தேர்வுகளை எப்படியெல்லாம் நடத்தலாம், மாணவர்களுக்கான தேர்வு மையங்களை அதிகரிக்கலாமா? அல்லது தேர்வு நேரத்தைக் குறைக்கலாமா? என மத்திய அரசு கேட்டிருந்தது. ஆனால் அவை அனைத்தும் சிபிஎஸ்இ மாணவர்களை மனதில் கொண்டு இருந்ததால், மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான ஆலோசனையை வழங்கும் படி கடிதம் எழுதியிருந்தோம்.

+2 பொதுத்தேர்வை குறித்து முடிவு எடுக்கும் முன்பு கல்வியாளர்கள், மருத்துவ நிபுணர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், மாணவர் அமைப்பினர், ஆசிரியர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தி, அவர்களுடைய கருத்துக்களை 2 நாட்களுக்குள் தெரிவிக்கும் படி முதலமைச்சர் கூறியுள்ளார். அதேபோல் இரண்டு நாட்களுக்குள் மற்ற மாநிலங்களின் முடிவையும் அறிந்து கொண்டு, இறுதி முடிவை அறிவிக்க உள்ளோம். இதை எல்லாம் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறுதி முடிவை அறிவிப்பார் என தெரிவித்துள்ளார்.

தமிழ்?மலர் செய்தி நிருபர் ஶ்ரீசரவணகுமார். திருப்பூர்

Leave a Reply

Your email address will not be published.