2 லட்சம் ரெம்டெசிவிர் மருந்து பாட்டில்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல்

தமிழகத்துக்கு 2 லட்சம் ரெம்டெசிவிர் மருந்து பாட்டில்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 21-ந்தேதி முதல் மே மாதம் 16-ந்தேதி வரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ரெம்டெசிவிர் மருந்துகளின் விவரங்களை மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது. அதன்படி, மேற்சொன்ன தேதிகள் வரை தயாரிப்பு நிறுவனங்கள் மூலமாக ரெம்டெசிவிர் மருந்துகள் வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்துக்கு ஜைட்ஸ் காடில்லா நிறுவனத்திடம் இருந்து 36 ஆயிரம் பாட்டில்கள், ஹெட்ரோ நிறுவனத்திடம் இருந்து 69 ஆயிரத்து 400 பாட்டில்கள், மைலான் நிறுவனத்திடம் இருந்து 72 ஆயிரத்து 500 பாட்டில்கள், சிப்லா நிறுவனத்திடம் இருந்து 5 ஆயிரம் பாட்டில்கள், சன் நிறுவனத்திடம் இருந்து 10 ஆயிரம் பாட்டில்கள், ஜூபிலன்ட் நிறுவனத்திடம் இருந்து 3 ஆயிரத்து 100 பாட்டில்கள், டாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்திடம் இருந்து 9 ஆயிரம் பாட்டில்கள் என மொத்தம் 2 லட்சத்து 5 ஆயிரம் ரெம்டெசிவிர் மருந்து பாட்டில்கள் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன.

அதேபோல், புதுச்சேரி மாநிலத்துக்கு ஹெட்ரோ நிறுவனத்திடம் இருந்து 4 ஆயிரம் பாட்டில்கள், சன் நிறுவனத்திடம் இருந்து 1,900 பாட்டில்கள், டாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்திடம் இருந்து 5 ஆயிரத்து 100 பாட்டில்கள் என மொத்தம் 11 ஆயிரம் ரெம்டெசிவிர் மருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேற்கண்ட தகவல் மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.