இன்று கவிஞர்,எழுத்தாளர்,நாடகாசிரியர்,விடுதலை போராளி,மெய்யியலாளர்,இசையமைப்பாளர்,ஓவியர் என பன்முகம் கொண்ட இந்திய தேசத்தின் பல்துறையறிஞர் அமரர். “ரபீந்திரநாத் தாகூர்” அவர்களின் 160 வது ஜனன தினம்.

07.05.1861 அன்று கல்கத்தாவில் தேவேந்திரநாத் தாகூர்,சாரதாதேவி இணையருக்கு ஒன்பதாவது மகனாகப் பிறந்தார் தாகூர்.இவரது தாத்தா பெயர் த்வாரஹாநாத் தாகூர்.கல்கத்தாவில் ஓர் பணக்கார பிராமணக்குடும்பத்தில் பிறந்தவர் தாகூர். வங்காள மொழி,சமஸ்கிருத மொழி ஆகியவற்றில் சிறந்த புலமைப் பெற்றவர் இவர்.அத்துடன் எழுத்துத்துறை,இசையமைப்பு,
நாடகம்,கவிதை,ஓவியம்,இலக்கியம் போன்ற எல்லாத்துறைகளிலும் விற்பன்னர்.1883 ஆண்டு தனது 22 ஆம் வயதில் 10 வயது நிரம்பிய மிருணாலிதேவி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு ஆண்,மூன்று பெண் குழந்தைகளும் பிறந்தன.இவர் எழுதிய “கீதாஞ்சலி “கவிதை படைப்பிற்கு 1913 ஆம் ஆண்டு சிறந்த இலக்கியத்திற்கான “நோபல் விருது” கிடைக்கப்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இவ்விருதைப் பெற்ற முதல் ஆசியர் தாகூரே.
இந்திய விடுதலைக்காக பல வழிகளில் போராடியவர்,ஆங்கில அரசு1905 வழங்கிய”சர்(sir)”பட்டத்தை,ஜுலியன் வாலாபாக் படுகொலைகளுக்குப் பின் 1919 இல் திருப்பியளித்து தனது எதிர்ப்பினை தெரிவித்தார்.இந்திய தேச தேசிய கீதமான
“ஜன கண மன”மற்றும் வங்காள தேச தேசிய கீதமான “அமார் சோனார் பங்களா “போன்றன
இவர் எழுதியவைகளே.இவரது நூல்களில் சிலவற்றை தமிழில் மொழியாக்கம் செய்தவர்
திரு. நா.குமாரசாமி அவர்கள். கீதாஞ்சலி,கோரா,காரே பைரே போன்ற பிரபல படைப்புகள் இவருக்கு புகழ் சேர்த்தவைகளாகும். சுவாமி விவேகானந்தர் அவர்கள் எழுதிய “சங்கீத கற்பகதரு”என்ற இசைநூலில் தாகூரின் பல இசைத்தொகுப்புகளை இணைத்துள்ளார்.1878 இலிருந்து 1932 ஆண்டுகள் வரை ஜந்து கண்டங்களில் சுமார் முப்பதிற்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சென்று பல அறிஞர்களை சந்தித்தார் தாகூர். எல்பர்ட் ஐன்ஸ்டீனுடன்  நெருங்கிப் பழகும் வாய்ப்பும் கிடைக்கப்பெற்று அவரது இல்லத்தில் அவரைச் சந்தித்து நட்பு கொண்டவர் தாகூர்.
“விஸ்வபாரதி பல்கலைக்கழகம் “இவரால் உருவாக்கப்பட்டவை. தாகூர் இறப்பதற்கு முன் 1940 இல் ஒக்ஸ்போஃர்ட் பல்கலைக்கழகம் இவருக்கு டொக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது.இந்திய இலக்கியவாதிகளில் போற்றுதலுக்குரிய  திரு. ரபீந்திரநாத் தாகூர் அவர்கள் 07.08.1941 அன்று அமரரானார்.

ஆக்கம்:எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ் கம்பளைஇலங்கை..

Leave a Reply

Your email address will not be published.